மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்; ஜனாதிபதி மாளிகை முற்றுகை 

by Bella Dalima 09-07-2022 | 6:52 PM
Colombo (News 1st) நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமான ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி கடந்த பல மாதங்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மே மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தின் இறுதி தினமாக இன்றைய தினத்தை அறிவித்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சிலாபம், குருநாகல் நகரங்களிலிருந்து இரு தினங்களுக்கு முன்பே பேரணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எனினும், பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கு மத்தியில் இன்று காலை 8 மணியுடன் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான ஆதரவு மேலும் வலுப்பெற்றது. பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஊடாக பெருமளவான மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்தனர். பாதுகாப்பு படையினரின் கண்ணீர்ப்புகை பிரயோகத்தையும் பொருட்படுத்தாது, போராட்டக்காரர்கள் முன்னேறி கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர். மிரிஹான இல்லத்தில் தங்கியிருந்த போதிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஜனாதிபதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கோட்டாகோகம போராட்டக்களத்தில் ஒன்று திரண்டிருந்த மக்களும், ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்தனர். கடந்த 91 நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கட்சி பேதமின்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஒன்றுகூடிய நிலையில் அனைவரும் இணைந்து ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டனர். பெருந்திரளான மக்கள் , கட்சி பேதமின்றி ஒன்று திரண்டு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக் கோரி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். காலை முதல் மக்கள் சற்றும் தளராது தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி தங்கியுள்ள இடம் குறித்து இதுவரை எந்த வித தகவலும் வௌியாகவில்லை. இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிதுரல மற்றும் கஜபாஹூ எனும் கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் சிலர் பயணித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹார்பர் மாஸ்டர் இதனை உறுதிப்படுத்தினார். பொதுமகன் ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியில், சிலர் பாரிய பயணப்பொதிகளை கொண்டு செல்கின்றமை தெரியவந்தது. கப்பல்களில் பயணித்தவர்கள் தொடர்பில் வினவிய போதிலும் அது தொடர்பிலான தகவல்களை வழங்க முடியாது என ஹார்பர் மாஸ்டர் கூறினார். இதனிடையே, பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் அதிசொகுசு வாகனங்கள் பயணிக்கும் காணொளிகள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.