போசாக்கான அரிசியை வழங்கவுள்ள உலக உணவுத் திட்டம் 

பாடசாலை மாணவர்களுக்காக போசாக்கான அரிசியை வழங்கவுள்ள உலக உணவுத் திட்டம் 

by Bella Dalima 08-07-2022 | 5:11 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்வதற்காக இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (Folic Acid) கலந்த அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு 2 ,70,000 கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளதாக உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான போசாக்கு திட்டங்களின் இணைப்பாளர் டொக்டர் கலன பீரிஸ் தெரிவித்தார். இதன் மூலம் 7,800 பாடசாலைகளின் மாணவர்களுக்கு போசாக்கு நிறைந்த உணவுகளை வழங்க முடியும் என அவர் கூறினார். இலங்கையில் உள்ள சிறார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்த தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 1, 27,000 முன்பள்ளி மாணவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இலங்கையில் 5,75,000 முன்பள்ளி மாணவர்கள் உள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார, சமூக மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, அவர்களுக்கான காலை உணவிற்காக மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனடிப்படையில், 30 ரூபாவாக இருந்த மாணவர் ஒருவரின் காலை உணவிற்கான தொகையை 100 ரூபா வரை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.