எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

by Staff Writer 07-07-2022 | 2:05 PM
Colombo (News 1st) பம்பலப்பிட்டி மற்றும் பயாகல பகுதிகளில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். பம்பலப்பிட்டி IOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற 60 வயதான ஒருவர் திடீரென சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு(06) அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று(07) அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர். புத்தளம் - மதுரங்குளி பகுதியை சேர்ந்த நபர், இராஜகிரிய - ஒபேசேகரபுர பகுதியிலுள்ள தமது மகளுடன் வசித்து வந்தநிலையில், நேற்றிரவு(06) எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளார். இவரின் ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பயாகல பகுதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று(07) அதிகாலை உயிரிழந்துள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த இரு  மரணங்களுடன் எரிபொருள் வரிசைகளில் பதிவாகிய 16 மரணங்கள் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் அறிக்கையிட்டுள்ளது.