ஹிருணிக்கா பிரேமச்சந்திர பொலிஸ் பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 06-07-2022 | 6:06 PM
Colombo (News 1st) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்குமாறும் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, ஹிருணிக்கா பி​ரேமச்சந்திர ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரிய போதிலும் பாதுகாப்புத் தரப்பினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அவருடன் வந்த மேலும் சிலர் ஜனாதிபதி மாளிகைக்கு பிரவேசிக்கும் செத்தம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீதித் தடையை மீறி பயணிக்க பொலிஸார் இதன்போது இடமளிக்கவில்லை. ஹிருணிக்கா பி​ரேமச்சந்திர உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸார் திடீரென அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஹிருணிக்கா பி​ரேமச்சந்திர மற்றும் ரெஹான் ஜயவிக்ரம உள்ளிட்ட 12 பேரை கைது செய்த பொலிஸார், அவர்களை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று பிற்கல் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.