நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் பொறுப்பிலிருந்து இராஜினாமா

by Staff Writer 06-07-2022 | 2:21 PM
Colombo (News 1st) விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதவியை இராஜினாமா செய்துள்ளார். தய்சே(Taisei) நிறுவனத்திடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பெரேமதாச , அமைச்சர் ஒருவர் ​Taisei நிறுவனத்திடம் இலஞ்சம் கோரியதாக நேற்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தமது பெயர் நேரடியாக குறிப்பிடப்படாத போதிலும் தய்சே நிறுவனம் முன்னெடுக்கும் செயற்றிட்டம் தமது அமைச்சின் பொறுப்பின் கீழ் வருவதாக நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட கால அரசியல் அனுபவமுள்ள தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் எதிர்த்தரப்பினர் இந்த வதந்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளதாகவும் அவரது கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் அரசாங்கத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்காகவும் முறையான விசாரணை நடத்துமாறு நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பக்கச்சார்பற்ற விசாரணைக்கு சந்தர்ப்பமளிக்கும் வகையில் தாம் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.