by Bella Dalima 06-07-2022 | 4:28 PM
Colombo (News 1st) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து நிதி அமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் (Rishi Sunak) சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் (Sajid Javid) நேற்று மாலை பதவி விலகியுள்ளனர்.
பதவி விலகல் முடிவை அறிவித்த ரிஷி சுனக், அரசாங்கம் "சரியாக, திறமையாக, தீவிரமாக" நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு," என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிரத்தையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் அவர் தமது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், "அரசாங்கம் தேசிய நலனுக்காக செயற்படவில்லை," என்று கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் நல்ல மனசாட்சியுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும் என சுகாதார அமைச்சர் ஜாவித் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் வாழ்க்கைச்செலவு அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகிப்பவர்கள் விலகியுள்ளமை போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.