கந்தக்காட்டில் கைதி உயிரிழப்பு: நால்வர் கைது

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழப்பு: விமானப்படை, இராணுவத்தை சேர்ந்த நால்வர் கைது

by Bella Dalima 02-07-2022 | 4:03 PM
Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படையை சேர்ந்த இருவரும், இராணுவத்தை சேர்ந்த இருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரும் கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் உதவி ஆலோசகர்களாக பணியாற்றியுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, உயிரிழந்தவரை தாக்குவதற்கு பயன்படுத்திய தடிமனான மின் கம்பியும் 2 மூங்கில் தடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை, உயிரிழந்த கைதியின் சடலம் அவரின் சகோதரர் மற்றும் நண்பர்களால் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 5 ஆம் திகதி பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது. புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 679 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற மேலும் 44 கைதிகளை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்குமாயின், வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718 591 235 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.