by Bella Dalima 01-07-2022 | 5:21 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - காத்தான்குடியில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வியாபார நிலையத்தில் பெட்ரோலை பதுக்கி வைத்து, அதிக விலையில் விற்பனை செய்த போதே அந்நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 15 லிட்டர் 750 மில்லிலிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலை 1500 முதல் 2000 ஆயிரம் ரூபா வரை குறித்த நபர் விற்பனை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு இன்று காலை பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 05 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, புத்தளம் - வண்ணாத்திவில்லு விஜயபுரயில் எரிபொருளை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் அறையில் மறைத்து வைத்திருந்த சுமார் 300 லிட்டர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.