நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு யூரியா

நெற்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா உரம் விநியோகிக்கப்படவுள்ளது

by Bella Dalima 30-06-2022 | 4:21 PM
Colombo (News 1st)  இம்முறை சிறுபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா உரம் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தை நெற்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட போதிலும் விவசாயிகளுக்கு யூரியா உரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யூரியா உரத்தை ஹெக்டேருக்கு 100 கிலோ வீதம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய யூரியா உரத்தை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது தொடர்பில் நேற்று அனைத்து அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது விவசாய அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்துள்ளார்.