எரிவாயு கொள்வனவிற்கான உடன்படிக்கை கைச்சாத்து

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவிற்கான உடன்படிக்கை கைச்சாத்து

by Bella Dalima 30-06-2022 | 5:14 PM
Colombo (News 1st) ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் கீழ் லிட்ரோ நிறுவனத்தினூடாக எரிவாயு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு 90 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதுடன், அதில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி வழங்கியுள்ளது. எஞ்சிய 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி லிட்ரோ நிறுவனத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்படும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவில் 70 வீதமானவற்றை வீட்டுப் பாவனைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதில் 12.5 கிலோகிராம் நிறையுடைய 05 மில்லியன் சிலிண்டர்களையும் 05 கிலோகிராம் நிறையுடைய ஒரு மில்லியன் சிலிண்டர்களையும் 2.5 கிலோகிராம் நிறையுடைய ஒரு மில்லியன் சிலிண்டர்களையும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொள்வனவு செய்யவுள்ள எரிவாயுவில் 30 வீதமானவற்றை வர்த்தக செயற்பாடுகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 20 மில்லியன் டொலர் முதலீட்டில் லிட்ரோ நிறுவனம் கொள்வனவு செய்யும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவில் ஆரம்பகட்ட தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.