இலங்கையை சேர்ந்த மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

by Bella Dalima 30-06-2022 | 7:01 PM
Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த மேலும் நால்வர் படகு மூலம் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். 6 வயது சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் மற்றும் ஒருவரும் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை சேர்ந்தவர்களே படகில் இன்று அதிகாலை நான்காம் மணல் திட்டை சென்றடைந்துள்ளனர். குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், இராமேஸ்வரம் கரையோரப் பிரிவினர் அவர்களை மீட்டு விசாரணைகள் நடத்தி வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் 96 பேர் கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.