by Bella Dalima 28-06-2022 | 12:21 PM
Colombo (News 1st) ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ள குறைந்தளவிலான கையிருப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பகிர்ந்தளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
துறைமுகம், சுகாதாரம், உணவு விநியோகம், விவசாயம் ஆகிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஏனைய அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்கள், தத்தமது வீடுகளில் இருந்து பணிபுரிவதன் மூலம் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமென அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம், அதிபர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்ததாக பந்துல குணவர்தன கூறினார்.
எனவே, போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமப்புறங்களில் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தாமல் பாடசாலைகளை நடத்தவும் ஏனைய பாடசாலைகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.