அரச உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

by Bella Dalima 26-06-2022 | 4:23 PM
Colombo (News 1st) அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரமே நிறுவனத்திற்கு அழைக்க வேண்டும். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உத்தியோகத்தர்களை வீட்டிலேயே தங்கவைத்து, அவர்களின் சேவைகளை இயலுமானவரை இணையத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் நிறுவனங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பது தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர் அல்லது மாகாணங்களின் பிரதம செயலாளர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையுடன் எடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த காலப்பகுதியில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு உத்தியோகத்தர்களின் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்து சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் இணையத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.