10 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கினூடாக இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி

by Bella Dalima 25-06-2022 | 5:34 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 10 அத்தியாவசிய உணவு பொருட்களை திறந்த கணக்கினூடாக (Open Account) இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரிசி, கோதுமை, வௌ்ளை சீனி, சிவப்பு பருப்பு, பால் மா, பெரிய வெங்காயம், கிழங்கு, செத்தல் மிளகாய், நெத்தலி மற்றும் வட்டானா பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை வரையறுக்கப்பட்ட அளவில் திறந்த வங்கிக் கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பொருட்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாதங்களுக்கு இறக்குமதி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்காக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சு இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தது.