மூன்று துறைகளுக்கு இருக்கை பேராசிரியர்கள் நியமனம்

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்று துறைகளுக்கு இருக்கை பேராசிரியர்கள் நியமனம்

by Staff Writer 25-06-2022 | 4:28 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்று துறைகளுக்கு இருக்கை பேராசிரியர்களாக (Cadre Chair Professor) மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை பல்கலைக்கழக பேரவை இன்று வழங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. மருத்துவ பீடத்தின் மருத்துவத்துறை, குழந்தை மருத்துவத்துறை, மற்றும் சமுதாய, குடும்ப மருத்துவத்துறை ஆகியவற்றில் நீண்ட காலமாக நிரப்பப்படாதிருந்த இருக்கை பேராசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தன. அதற்கமைய, கிடைத்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்றன. அதற்கமைய, 1. மருத்துவத்துறை பேராசிரியரும் (Professor in Medicine) மருத்துவ நிபுணருமான பேராசிரியர் தி. குமணன், மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Medicine) 2. குழந்தை மருத்துவத்துறை பேராசிரியரும் (Professor in Pediatric), குழந்தை மருத்துவ நிபுணருமான பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் குழந்தை மருத்துவத்துறை பேராசிரியராகவும் (Professor of Pediatric) 3. சமுதாய மருத்துவத்துறை பேராசிரியரும் (Professor in Community Medicine) சமுதாய வைத்திய நிபுணருமான பேராசிரியர் குமரேந்திரன், சமுதாய மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Community Medicine) நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தெரிவுக்குழு முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்த பேரவை, அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.