இலங்கைத் தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சி

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சி

by Staff Writer 25-06-2022 | 7:16 PM
தமிழ்நாடு: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழர்கள் 30 பேர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த 30 பேரும் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் திருச்சி அகதிகள் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 35 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நேற்றைய போராட்டத்தின் போது ஒருவர் தீக்குளிக்க எடுத்த முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளது. யாழ். பருத்தித்துறையை சேர்ந்த அகதி ஒருவரே சிறப்பு முகாமிலுள்ள உறவுகளை விடுவிக்க கோரியும் மதுரை திருவாதவூர் அகதிகள் மறுவாழ்வு அமையத்தில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தன்னை இணைக்குமாறு கோரியும் நேற்று தீக்குளிக்க முற்பட்டுள்ளார். தீக்காயங்களுக்குள்ளான அந்நபர், திருச்சி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.