Monkeypox பரவல்: பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்

Monkeypox பரவல்: பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்

by Bella Dalima 24-06-2022 | 6:17 PM
Colombo (News 1st) Monkeypox வைரஸ் பரவலை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த தொற்று நோய் எல்லை பகுதிகளில் மேலும் பரவும் அபாயமுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் Monkeypox தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளதுடன், பிரித்தானியாவில் மாத்திரம் 800-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தொற்று பரவும் வேகம் 5 நாட்களில் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை தவிர ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போர்த்துக்கல்லிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில், ஒன்றுகூடிய உலக சுகாதார ஸ்தாபனம், அசாதாரணமான வகையில் தொற்று பரவுவது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் சமூக பரவலாக தொற்றின் வேகம் விரிவடைவதால், குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு Monkeypox வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், சிங்கப்பூரிலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.