திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல்

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல்

by Bella Dalima 24-06-2022 | 6:07 PM
இந்தியா: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு (Draupadi Murmu) இன்று (24) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் பழங்குடி இன தலைவருமான திரெளபதி முர்மு, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் சென்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், வாக்கெண்ணிக்கை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. புதிய ஜனாதிபதி ஜூலை 25 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்வார் என இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்த்தரப்பு சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் 64 வயதான திரௌபதி முர்மு வெற்றிபெற்றால், இந்திய ஜனாதிபதியாகும் முதலாவது பழங்குடியின பெண்ணாக வரலாற்றில் அவர் பதிவாவார்.