நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜோன்ஸ்டனுக்கு அறிவிப்பு 

ஜூலை 4 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு அறிவிப்பு

by Bella Dalima 24-06-2022 | 5:08 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 03 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது. சதொச நிறுவனத்தின் ஊழியர்களை கடமைகளுக்கு அப்பால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதனூடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் செயற்பாட்டு பணிப்பாளர் மொஹமட் சஹீர் ஆகியோருக்கே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பில் குற்றப்பகிர்வு பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டமையால், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2010 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது, சதொச நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை சட்டரீதியான கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமையால் , இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.