இரட்டைக் கொலை: மற்றுமொரு சந்தேகநபர் தேடப்படுகிறார்

உயிலங்குளம் இரட்டைக் கொலை: மற்றுமொரு சந்தேகநபர் தேடப்படுகிறார்

by Staff Writer 24-06-2022 | 7:43 PM
Colombo (News 1st) மன்னார் - உயிலங்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லா முன்னிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நேற்று (23) கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் மாத்திரம் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏனைய 18 சந்தேகநபர்களும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்த முடியாது போனதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்தவற்கான தேவை உள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர். விடயங்களை ஆராய்ந்த மன்னார் நீதவான், சந்தேகநபர்கள் 20 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். கடந்த 4 ஆம் திகதி மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே, 10 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களுக்கு பின்னணியாக அமைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கான பின்னணி என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் உயிலங்குளம், தலைமன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.