இந்திய பிரதிநிதிகள் இலங்கை வருகிறார்கள்

நிவாரணம் தொடர்பில் கலந்துரையாட இந்திய பிரதிநிதிகள் இலங்கை வருகிறார்கள்: பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 22-06-2022 | 5:22 PM
Colombo (News 1st) இந்திய அரசின் மூன்று பிரதிநிதிகள் நாளை (23) இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மேலும் நிதியுதவியை இந்தியாவிடம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியா இதனை உதவியாக மேற்கொள்ளாது எனவும் அவர்களுக்கும் வரையறை காணப்படுவதாகவும் குறித்த கடனை இலங்கை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இந்த பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதே பாதுகாப்பானது எனவும் பிரதமர் தெரிவித்தார். ரஷ்ய எண்ணெய் , ரஷ்யா - உக்ரைன் யுத்தம் தொடர்பில் தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.