அமெரிக்காவிடம்  $5.75 Mn மேலதிக நிதியுதவி

அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு 5.75 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி

by Staff Writer 21-06-2022 | 3:39 PM
Colombo (News 1st) இலங்கைக்கு 5.75 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இந்த நிதி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தினால் நன்கொடையாக வழங்கப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த மனிதாபிமான நிதியுதவியானது குறுகிய கால வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் விதைகள் உள்ளிட்ட விவசாய விநியோகத்தை நேரடியாக வழங்குவதற்கும் உதவுமென கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. இலங்கை மக்களின் உடனடி மற்றும் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுவதற்காக, எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் முதலீடு மற்றும் உதவித் திட்டங்களை ஆரம்பிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களின் 2 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியானது இலங்கையின் சுற்றுலா, சிறு தொழில்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தி மற்றும் சிவில் சமூகத்தை வலுப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏதுவாக அமையுமெனவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.