by Staff Writer 21-06-2022 | 5:45 PM
Colombo (News 1st) ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இயற்கை கடல்சார் சூழலில் பிடிக்கப்படும் கடலட்டைகளின் ஏற்றுமதியால், குறிப்பிடத்தக்களவு வௌிநாட்டு செலாவணியை ஈட்டமுடியும் என்பதற்கமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 5000 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட காணிகளில் 100 ஏக்கர் வரையிலான கடலட்டை உற்பத்தி, ஏற்றுமதி கிராமங்களை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை உருவாக்குதல், கடலட்டை பண்ணைகளை விரிவாக்கம் செய்தல், கடலட்டை ஏற்றுமதி கிராமங்களை உருவாக்குதல் தொடர்பிலும் இந்த அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.