தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில்

தனியார் பஸ்களின் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 18-06-2022 | 3:35 PM
Colombo (News 1st) எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் பஸ்களின் சேவை இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டினால் பஸ் சேவையை இன்றைய தினமும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், பஸ் சேவைகளையும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். நாளைய தினமும் பஸ்களை மட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எரிபொருள் கிடைக்காவிடின் மேலும் பஸ் சேவைகளை குறைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எரிபொருள் விநியோகத்தின் அடிப்படையில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டா தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் கொழும்பு பஸ்டியன் பஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், மாகாணங்களுக்கிடையிலும் மாகாணங்களுக்குள்ளும் பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. பயணிகளின் நலன் கருதி, கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ்கள் மற்றும் ரயில்கள் இன்று வழமை போன்று சேவையில் ஈடுபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.