அந்நிய செலாவணியை ஈட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்

வெளிநாட்டு முதலீட்டிற்கு இடையூறாகவுள்ள ஒழுங்கு விதிகளை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 17-06-2022 | 3:48 PM
Colombo (News 1st) வெளிநாட்டு முதலீட்டிற்கு இடையூறாகவுள்ள பழமையான ஒழுங்கு விதிகளை மீளாய்வு செய்து, புதிய வழிமுறைகளை கையாளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கைத்தொழில் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றம் தொடர்பில் நேற்று (16) நடைபெற்ற மீளாய்வுக்கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய தொழில்களை அடையாளம் கண்டு, அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்துவது, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியை மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்ட விதிமுறைகளினால் மாணிக்கக்கல் போன்ற தொழில் நிறுவனங்களின் இலாபம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார். கைத்தொழில்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒரு இடத்திற்கு கொண்டு வருவதன் மூலம், அதிக முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.