அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, 8 பேர் காயம்

by Bella Dalima 17-06-2022 | 4:47 PM
இந்தியா: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் - செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் நான்கு ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வன்முறை கும்பலை கலைக்க பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதிற்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக்கொள்ளும் "அக்னிபாத்" திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தில் இணையும் வீரர்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடையாது. எனவே, இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பீகாரில் இராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் நேற்று முன்தினத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது. பல இடங்களில் மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன்,  4 ரயில்களுக்கு தீ வைத்துள்ளனர்.