தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு

by Staff Writer 14-06-2022 | 8:10 PM
தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால், விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையான 61 நாட்கள் தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150,000 விசைப்படகுகள் இக்காலகட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருக்கவில்லை. இந்நிலையில், இன்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகின்ற நிலையில், நாளை முதல் கடலுக்கு செல்வதற்காக இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பிரதேச மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியோ, அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியோ மீன்பிடிக்கக் கூடாது என தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.