சகோதரர்கள் இருவர் கொலை; மேலும் ஒரு சந்தேகநபர் கைது

உயிலங்குளத்தில் சகோதரர்கள் இருவர் கொலை; மேலும் ஒரு சந்தேகநபர் கைது

by Staff Writer 14-06-2022 | 8:35 PM
Colombo (News 1st) மன்னார் - உயிலங்குளம், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், உயிலங்குளத்தை சேர்ந்த 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் தொடர்ந்தும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 20 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 4 ஆம் திகதி மன்னார் - உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே, 10 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களுக்கு பின்னணியாக அமைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கான பின்னணி என பொலிஸார் தெரிவித்தனர். முதலாவதாக கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.