அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

by Staff Writer 11-06-2022 | 3:07 PM
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில், அதிகபட்ச சில்லறை விலை, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகும். சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் கீரிசம்பா 260 ரூபாவாகும். இதற்கமைய, குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமான விலைக்கு எவரேனும் விற்பனை செய்யவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 20 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரு பகுதிகளில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நெல் மூடை ஒன்றின் விலை 10,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.