யூரியாவிற்காக 55 மில்லியன் டொலர் கடன்

யூரியாவிற்காக 55 மில்லியன் டொலர் கடன்; இந்திய EXIM வங்கியுடன் உடன்படிக்கை கைச்சாத்து

by Staff Writer 10-06-2022 | 6:38 PM
Colombo (News 1st) யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக 55 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்தியாவின் EXIM வங்கியுடன் இன்று (10) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். பெரும்போகத்திற்கு தேவையான 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம், இலங்கை அரசாங்கம் கடன் வசதியை கோரியிருந்தது. இந்த கோரிக்கைக்கு அமைய, யூரியா உரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 55 மில்லியன் டொலர் கடன் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.