கல்வி அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம்

by Staff Writer 10-06-2022 | 4:37 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை - இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கல்வி அமைச்சிற்குள் நுழைய மாணவர்கள் முற்பட்ட போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். ருஹூணு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும் அப்பாவிகளான சில மாணவர்களின் உறுப்புரிமை நீக்கப்படுவதை தடுக்குமாறும் கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை தாண்டி இசுருபாயவிற்குள் செல்ல முயற்சித்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் பல தடவைகள் இசுருபாயவிற்குள் நுழைய முயற்சித்த போதிலும் அந்த முயற்சி கைகூடவில்லை. கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இதன்போது பொலிஸார் முயற்சித்தனர். கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருகை தந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் பொலிஸார் தலையிட்டு பல்கலைக்கழக மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்காக சென்றனர். இரண்டு மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதனையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேவேளை, எந்தவொரு பல்கலைக்கழக மாணவரினதும் பிரச்சினை குறித்து, உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்தது. அதற்கமைய, பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை குறித்து அடுத்த வாரத்தில் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.