காகித பயன்பாட்டை குறைக்க திட்டம்

அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டை குறைக்க திட்டம்

by Staff Writer 08-06-2022 | 8:43 AM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் காகிதங்களுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படுவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அரச நிறுவனங்களின் வருடாந்த மற்றும் அரையாண்டு அறிக்கைகளை பாராளுமன்றம், கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு Ebook வடிவில் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னே தெரிவித்தார். அத்துடன், பல்வேறு படிவங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒரு படிவம் வழங்கப்பட்டு, WhatsApp போன்ற சமூக ஊடக வழிமுறைகளை பயன்படுத்தி உரிய தரப்பினருக்கு படிவங்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆண்டுதோறும் பல்வேறு படிவங்கள் மற்றும் அறிக்கைகளுக்கான காகிதத்திற்காக பெருந்தொகை செலவு ஏற்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். புதிய வேலைத்திட்டத்தின் கீழ், அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் திரைகளில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். புதிய வேலைத்திட்டத்திற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.