ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

by Staff Writer 07-06-2022 | 12:24 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புவனேக அலுவிஹாரே, L.T.B.தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் இன்று(07) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்டமை மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள அனுதாபங்களை ஆராய்ந்து ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதிப்பதற்கு தீர்மானித்ததாக, வழக்கின் தீர்ப்பை அறிவித்த போது நீதியரசர்கள் குழாமின் தலைவர் புஹனேக அலுவிஹாரே தெரிவித்தார். ஒத்திவைக்கப்பட்டுள்ள 05 வருடங்களுக்குள் ஏதேனும் குற்றச்செயல் தொடர்பில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டால், உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதியரசர் மேலும் அறிவித்துள்ளார்.