மிருசுவிலில் காணாமற்போய் மீட்கப்பட்ட இரண்டரை வயது சிறுமி; பொலிஸார் விசாரணை

by Bella Dalima 03-06-2022 | 10:33 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மிருசுவிலில் காணாமற்போய் 4 மணித்தியாலங்களில் மீட்கப்பட்ட இரண்டரை வயது சிறுமி தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். மீட்கப்பட்ட இரண்டரை வயது சிறுமி எவ்வித துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என சாவகச்சேரி வைத்தியசாலையின் அத்தியட்சகர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். மிருசுவிலில் ​​​நேற்று முன்தினம் காணாமற்போன சிறுமி சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மிருசுவில் வடக்கு கிராமத்திலுள்ள வீட்டு முற்றத்தில் தனது 11 வயது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியே காணாமற்போயுள்ளார். மாலை 5 மணி அளவில் காணாமற்போன சிறுமியைத் தேடும் நடவடிக்கையினை பொலிஸார், இராணுவத்தின் உதவியுடன் கிராம மக்கள் முன்னெடுத்திருந்தனர். 4 மணித்தியாலங்களின் பின்னர் கடந்த புதன்கிழமை இரவு 9 மணி அளவில் சிறுமி தனது வீட்டிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வரணி - மாசேரி பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. ஆட்டுக்குட்டியொன்றின் பின்னால் குறித்த சிறுமி சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏனைய செய்திகள்