by Bella Dalima 03-06-2022 | 10:33 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மிருசுவிலில் காணாமற்போய் 4 மணித்தியாலங்களில் மீட்கப்பட்ட இரண்டரை வயது சிறுமி தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட இரண்டரை வயது சிறுமி எவ்வித துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என சாவகச்சேரி வைத்தியசாலையின் அத்தியட்சகர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.
மிருசுவிலில் நேற்று முன்தினம் காணாமற்போன சிறுமி சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மிருசுவில் வடக்கு கிராமத்திலுள்ள வீட்டு முற்றத்தில் தனது 11 வயது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியே காணாமற்போயுள்ளார்.
மாலை 5 மணி அளவில் காணாமற்போன சிறுமியைத் தேடும் நடவடிக்கையினை பொலிஸார், இராணுவத்தின் உதவியுடன் கிராம மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
4 மணித்தியாலங்களின் பின்னர் கடந்த புதன்கிழமை இரவு 9 மணி அளவில் சிறுமி தனது வீட்டிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வரணி - மாசேரி பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.
ஆட்டுக்குட்டியொன்றின் பின்னால் குறித்த சிறுமி சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.