மஹிந்த கஹந்தகமவிற்கு ஜூன் 8 வரை விளக்கமறியல்

மஹிந்த கஹந்தகமவிற்கு ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 03-06-2022 | 4:33 PM
Colombo (News 1st) அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு நகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபராக மஹிந்த கஹந்தகம கடந்த முதலாம் திகதி சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டார். வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மஹிந்த கஹந்தகம ஆஜராகியதுடன், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.