தொழில் திணைக்களம் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்

தொழில் திணைக்கள அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூட தீர்மானம்

by Staff Writer 02-06-2022 | 1:37 PM
Colombo (News 1st) தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. எனினும், தொழில் திணைக்களத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் பாதிப்பு ஏற்படாது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஊழியர் சேமலாப நிதியின் செயற்பாடுகளுக்கு தடையோ, தாமதமோ ஏற்படாது எனவும் அமைச்சு கூறியுள்ளது. ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு செல்வதில்லை என்ற போதிலும், அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என சுற்றறிக்கையின் மூலம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செலவினங்களைக் குறைப்பதற்காக அமைச்சு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அலுவலக மின்சாரம் மற்றும் போக்குவரத்து செலவுகள் உட்பட பல பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்துமாறு அமைச்சர் அண்மையில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, அலுவலகங்கள் திறக்கப்படும் நான்கு நாட்களிலும் தொழில் துறையின் பணிகள் அதிகபட்ச செயற்திறனுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.