கடவுச்சீட்டுகளுக்கு அதிக கேள்வி

கடவுச்சீட்டுகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு

by Staff Writer 02-06-2022 | 8:29 AM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஒரு நாள் சேவையினூடாக அதிகபட்சமாக 2,500 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சேவையை வழங்குவதன் ஊடாகவே அதிகபட்ச கடவுச்சீட்டுகளை விநியோகிக்க முடிவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக, சாதாரண நடைமுறையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, இந்த ஆண்டில் அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் 74,890 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி, பெப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 382,506 ஆக பதிவாகியுள்ளது.