மே 9 வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சந்தேகநபர்

மே 9 வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சந்தேகநபர்; சனத், மிலானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 01-06-2022 | 7:45 PM
Colombo (News 1st) மே மாதம் 9 ஆம் திகதி அமைதியான போராட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் சந்தேகநபராக பெயரிடுவதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன இன்று கோட்டை நீதவான் திலின கமகேவிடம் அறிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அலரி மாளிகையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் இரண்டு உளநல நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, மே 9 சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 சந்தேகபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் ஆசிரிய தொழிற்சங்க தலைவி வசந்தா ஹந்தபான்கொடவும் இவர்களில் அடங்குகின்றார். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் இன்று skype ஊடாக மன்றில் தோன்றினர்.