தேஷபந்து தென்னக்கோனுக்கு இடமாற்றம் வழங்கப்படாதது ஏன்: பொலிஸ்மா அதிபர் நீதிமன்றில் விளக்கம்

by Staff Writer 01-06-2022 | 7:38 PM
Colombo (News 1st) இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன, மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் செய்யப்படாமைக்கான காரணத்தை தௌிவுபடுத்தினார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் அதற்கான நடவடிக்கைகளை அரச சேவைகள் ஆணைக்குழுவே முன்னெடுக்க வேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபர் அறிக்கையொன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு விளக்கமளித்துள்ளார். தேசபந்த தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்குமாறு சட்டமா அதிபர் விடுத்த அறிவிப்பை அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததாக பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலும் தேசபந்து தென்னக்கோன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்படுகின்றமை தொடர்பில் கடந்த வழக்குத் தவணையின் போது கோட்டாகோகம போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வினவியிருந்தனர். இதன்போது கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கு அமையவே இன்றைய தினத்தில் பொலிஸ்மா அதிபர் மன்றில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். தேசபந்து தென்னக்கோனின் பிரத்தியேக மற்றும் அலுவலக கையடக்க தொலைபேசிகள் இரண்டும் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவினரால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.