சஷி வீரவன்சவிற்கு பிணை

by Staff Writer 31-05-2022 | 1:49 PM
Colombo (News 1st) இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்சவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச, சிறை அதிகாரிகளினால் இன்று(31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலி ஆவணங்களை சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சஷி வீரவன்சவிற்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த 27 ஆம் திகதி உத்தரவிடப்பட்டது. அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கையை ஆராய்ந்த போதே அவருக்கு பிணை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவறின் பாரதூரத்தன்மை மற்றும் பிரதிவாதியின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் கருத்திற்கொண்டு பிணை வழங்கும் போது நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு அமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார். விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபா வீதமான இரண்டு சரீர பிணைகளிலும் பிரதிவாதியை விடுவிக்க உத்தரவிட்டார். அத்துடன், அவர் வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்