யாழில் டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

by Staff Writer 28-05-2022 | 7:09 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுவிலை சேர்ந்த பரசுதன் யோவிதா என்ற 5 வயதான சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவில்லிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு அன்றைய தினமே வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இருப்பினும், அன்றிரவும் காய்ச்சல் அதிகரித்தமையால் வைத்தியர்களின் ஆலோசனைக்கமைவாக மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலினால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை - பாண்டியன்தாழ்வு பகுதியை சேர்ந்த 11 வயதான சிறுவன் கடந்த வாரம் உயிரிழந்தார்.