எரிபொருள் பதுக்கல்: சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது 

by Staff Writer 28-05-2022 | 8:40 PM
Colombo (News 1st) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளன. இதனிடையே, அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனை - குடாகம பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 116 லிட்டர் டீசல் மற்றும் 71 லிட்டர் பெட்ரோலை கைப்பற்றியதுடன், சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி - இந்துருவ, மிரிஸ்வத்த பகுதி சந்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 45 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது. வண்ணாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சந்தைத் தொகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் பெட்ரோலும் 150 லிட்டர் மண்ணெண்ணெய்யும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. போதுமான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் சில பகுதிகளில் மக்கள் எரிபொருளுக்காக தொடர்ந்தும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.