பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிகரிப்பு

by Bella Dalima 27-05-2022 | 5:49 PM
Colombo (News 1st) பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபா உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபா மதிப்பில் 179 ரூபா 86 சதமாக விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் 174 ரூபா 15 சதமாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 155 ரூபா 56 சதமாக உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார். டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபா இழப்பை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை ஆளும் மோசடி கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுடன் 30 சதவீத மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை தமது அரசு மேற்கொண்டதாகவும், ஆனால் ஷபாஸ் ஷெரீப் அரசு அதை தொடரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.