எரிபொருள் விநியோக முறைகேட்டை கண்டறிய புதிய செயலி

எரிபொருள் விநியோக முறைகேட்டை கண்டறிய புதிய செயலியை உருவாக்கியுள்ள பொலிஸார்

by Staff Writer 27-05-2022 | 6:44 PM
Colombo (News 1st) வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய செயலி (App) ஒன்று பொலிஸாரால் உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் முறையற்ற வகையில் இடம்பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து பொலிஸாரால் குறித்த செயலி கண்காணிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் வாகனங்களின் இலக்கத்தை செயலியில் பதிவேற்றியதன் பின்னர், குறித்த வாகனத்திற்கு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருளின் அளவு, எரிபொருள் நிரப்பிய திகதி, நேரம், ஏற்கனவே எரிபொருள் நிரப்பிய நிலையம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். முறையற்ற வகையில் ஒரே வாகனத்தை பயன்படுத்தி பல தடவைகள் எரிபொருளை பெற்று சேமிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.