யாழில் சிறுபோக வெங்காய செய்கையை தொடர முடியாத நிலை

by Staff Writer 26-05-2022 | 4:01 PM
Colombo (News 1st) எரிபொருள், உரப்பற்றாக்குறையால் யாழ். மாவட்டத்தில் சிறுபோக வெங்காய செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் வாழ்வாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். யாழ். மாவட்டத்தில் தற்போது சிறுபோக வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விதை வெங்காயம் ஒரு கிலோ விலை 500 ரூபாவை தாண்டியுள்ள நிலையில், ஒரு மூடை யூரியாவும் 40,000 ரூபா முதல் 45,000 ரூபா வரை விற்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கிருமி நாசினி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பன வெங்காய செய்கையை தொடர முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர். யாழ். வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பகுதிகளில் வழமையை விட இம்முறை வெங்காய செய்கை குறைவடைந்துள்ளது. வழமையாக சிறுபோக வெங்காய செய்கை மேற்கொள்ளப்படும் இடங்கள் பல தரிசு நிலங்களாக மாறியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.