அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 19 பேர் பலி

டெக்சாஸ் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 19 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 25-05-2022 | 7:17 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ் பிராந்தியத்தில் ஆரம்பப் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் பிராந்தியத்தின் Uvalde நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில், 18 வயதான இளைஞர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுததாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 முதல் 10 வயதுக்கிடைப்பட்ட 2, 3 மற்றும் 4ஆம் தர மாணவர்களே கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த 66 வயதான பெண்ணொருவரும் 10 வயதான சிறுமியொருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.