by Staff Writer 25-05-2022 | 8:30 PM
Colombo (News 1st) 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்தபோது, அதன் மூலம் பலன் கிடைக்காது என்பது தெரியவந்துள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் என்பவற்றின் நாளாந்த தேவை, சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தில் 10 வீதத்திற்கும் குறைவானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக குறித்த எண்ணெய் வகைகளின் விலைகளை வெகுவாக அதிகரிப்பதன் ஊடாக நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இன்னமும் சுமார் 1 ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில், அனுராதபுரத்தை சேர்ந்த சிலர் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் ஒரு ரூபா நட்டத்தை ஈடு செய்வதற்கான திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, கஞ்சனவின் உண்டியல் என பெயர் பொறிக்கப்பட்ட உண்டியல் ஒன்றை எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கிய அவர்கள், நட்டம் ஏற்படுகின்ற ஒரு ரூபாவை உண்டியலில் போடுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடனாளிகளாக விரும்பாதவர்கள் எரிபொருளை நிரப்பிக்கொண்டதன் பின்னர் ஒரு ரூபாவை உண்டியலில் போட்டுவிட்டுச் செல்லுமாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.
சேகரிக்கும் பணத்தை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு காசு கட்டளை ஊடாக அனுராதபுரம் தபாலகத்தில் இருந்து அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.