தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் உள்ள சீனா

தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் உள்ள சீனா

by Bella Dalima 24-05-2022 | 4:48 PM
Colombo (News 1st) தைவான் மீது படையெடுத்தால் சீனாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவம் களத்தில் இறங்கும் என்று அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சீன அதிபரின் ஒலிப்பதிவு (Audio) ஒன்று வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தேவை ஏற்பட்டால் தைவான் மீது இராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் மீது தாக்குதல் நடத்த இராணுவம் தயாராக உள்ளதாக சீன அதிபர் Xi Jinping பேசும் ஒலிப்பதிவு வௌியாகியுள்ளது. அதனை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மூத்த ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கசிய விட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. அந்த ஒலிப்பதிவில், 1.40 இலட்சம் இராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்ப்படுத்துமாறு சீன அதிபர் கூறியுள்ளார். மேலும், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், துணை செயலாளர், ஆளுநர், துணை ஆளுநர் ஆகியோர் பேசியதும் அதில் இடம்பெற்றுள்ளது. 1. 40 இலட்சம் வீரர்கள், 953 கப்பல்கள் 1,653 ஆளில்லாமல் இயங்கும் கருவிகள், 20 விமான நிலையங்கள், 6 கப்பல் கட்டுதல் மற்றும் பழுது நீக்கல் நிலையங்கள், 14 அவசரகால பரிமாற்ற மையங்கள், உணவு தானிய கிடங்குகள், மருத்துவ நிலையங்கள், இரத்த சேகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், எரிவாயு நிரப்பும் நிலையங்களை தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.