சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கான செயற்பாடு முன்னெடுப்பு; 2 நிறுவனங்கள் தெரிவு 

by Staff Writer 24-05-2022 | 8:22 PM
Colombo (News 1st) எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட நெருக்கடிகளால் மக்கள் துன்பப்படுகின்ற நிலையில், அரசாங்கம் பெற்றுக்கொண்ட சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டிற்கான நிதி ஆலோசனை சேவைகளுக்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் இரண்டை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, பிரான்ஸின் Lazard என்ற நிறுவனமே கடன் மறுசீரமைப்பிற்கான ஆலோசனை நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இந்த ஆலோசனை சேவைகளுக்கான கட்டணமாக 5.6 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்ட ஆலோசனைகளை வழங்க Clifford Chance நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.