21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாளை அமைச்சரவைக்கு..

21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

by Staff Writer 22-05-2022 | 3:48 PM
Colombo (News 1st) அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதில் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார். தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாகவும் பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது ​மேலும் குறிப்பிட்டுள்ளார்.